ஜம்மியத்துல் உலமா சபையை அரசியல்மயப்படுத்தும் முயற்சி?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜம்மியத்துல் உலமா சபையை அரசியலுக்குள் சிக்க வைத்து அசிங்கப்படுத்தும் சில விடயங்கள் தற்போது அரங்கேறி வருவதாக தெரிய வருகிறது. முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலரே இதற்கு தூபமிடுவதாகவும் நம்பப்படுகிறது. பொதுபல சேனாவின் ஹலால், ஹராம் விடயம் சூடுபிடித்துக் காணப்பட்டபோது அதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ஜம்மியதுல் உலமா சபையை அரசியல்மயப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அன்றைய முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன.
இந்தநிலையில், இன்னொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த சில அரசியல்வாதிகள் தற்போது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஒரு சாட்டாக வைத்து ஜம்மியத்துல் உலமா சபையையும் இந்த விடயத்துக்குள் இழுத்துப் போட்டு அதனை அரசியல்மயப்படுத்திய பின்னர் தங்களுக்கே உரித்தான பொறுப்புகளையும் அந்த அமைப்பின் தலையில் சுமத்தி விட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ளும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

