பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
“சூரிய காந்தி“ படத்தில் வரும் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடலின் இடையில் இப்படி சில வரிகள் வருகின்றன. ” உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிலவும் கூட மிதிக்கும்” என்ற கவிஞர் கண்ணதாசனின் இந்த கருத்தாழமிக்க வரிகள் பொதுவான நிலைப்பாட்டையே சுட்டி நின்றாலும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூதுக்கு பொருத்தமில்லாத வரிகளாகத்தான் இவை இருக்கும் என நம்பலாம்.
பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரச தலைமையினால் அழைத்துக் கொடுக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள இந்த அமைச்சர் பதவியானது தன்னை மேலே தூக்கி விட்டு மக்கள் செல்வாக்கையும் மேன்மையையும் ஏற்படுத்தி விடும் என அவர் நினைத்திருந்தால் அந்த நினைப்பு தப்பானது என்பதனை அவர் இப்போது ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவர் அரசியலின் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மதிக்கப்படாத, தனித்து விடப்பட்ட நிலைமையே இன்று காணப்படுகிறது.


