Sunday, June 29, 2014

இராமனைப் போல் ராசா இருந்தால்தான் அனுமான் போல் சேவகனும் இருப்பான்!

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அளுத்கமை, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பிரேரணை ஒன்றினை முன்வைப்பது குறித்து அண்மையில் கிழக்கு மாகாண சபையில் எழுந்த பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. சில வேளைகளில் பொதுபல சேனாவையும் முஸ்லிம்களையும் ஒரே மேசைக்குக் கொண்டு வந்து சமாதானமாக அனைத்தையும் தீர்த்து விடக் கூடியதாகவிருந்தாலும். கிழக்கு மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களிடையே இன்று எழுந்துள்ள அமளிதுமளியான நிலைக்கு தீர்வு காண்பது கஷ்டம் போல் தெரிகிறது.

அளுத்கமை, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்து உரையாற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அனுமதி கோரியிருந்த நிலையிலும் தவிசாளரால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் தவிசாளர் தவறு எதனையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

Sunday, June 22, 2014

சட்டமும் ஒழுங்கும் சிரித்துக் கொண்டிருந்த போது... அறியாமல் அழுது கொண்டிருந்த அளுத்கமை மக்கள்

ஏ.எச் .சித்தீக் காரியப்பர்
தமிழர்களுக்கு எதிரான 1983 ஜுலைக் கலவரத்தின் அகோரத்தை, அந்த இன சங்காரத்தை கொழும்பு கோட்டை ரயில் நிலைய பாலத்தின் மேல் நின்று நேரடியாகவே பார்த்துக் கொண்டிருந்த நினைவுகளையும் மியன்மார் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு பௌத்தர்கள் மேற்கொண்ட அநியாயங்கள் அக்கிரமங்களை ஊடகங்கள் மூலம் பார்த்து படித்த அண்மைக்கால ஞாபகங்களையும் கடந்த வாரம் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு மீட்டு விட்டது.
ஆயிரம், ஆயிரம் கோடிகள் நஷ்டம், மூன்று மனித உயிர்கள் பதறப் பதறப் பறிக்கப்பட்ட கொடூரம், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம். நூற்றுக்கணக்கில் வீடுகள்,  வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள்.

Saturday, June 7, 2014

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ? செல்லம்மா எந்தன் செல்லம்மா...

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கௌரவம் என்ற பழைய தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடல் வருகிறது.. நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?  காலம் மாறினால் கெளரவம் மாறுமா? அறிவை கொடுத்ததோ  துரோணரின் கெளரவம். அவர் மேல் தொடுத்ததோ அர்ச்சுனன் கெளரவம். நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்? நாளைய பாரதம் யாரதன் காரணம்? என்பதே அந்தப் பாடல் இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ளார் போல் தெரிகிறது. மேற்சொன்ன பாடல் வரிகள் போன்ற நிலைமையே  இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ளது.

Sunday, June 1, 2014

கடந்த சென்று விட்ட நேற்றைய நாள் இன்றைய நாளை பாழ்படுத்த கூடாது!



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முகங்கொண்டு அதற்கான தீர்வினைக் காணும் விடயத்தில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் அதன் அவசியம் குறித்தும் மீண்டும் இப்போது பேசப்படுகிறது. அதாவது, ஒரு கை ஒருபோதும் ஓசையைத் தராது. இரு கைகள் இணைந்தாலே சத்தம் வரும் என்பது போன்றதாக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் கருக்கட்டத் தொடங்கியுள்ளது.

Sunday, May 25, 2014

அறிந்தறிந்து செய்கின்ற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்!




                                                ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

தேர்தல் ஒன்று வருகிறது என்பதற்காகவோ அல்லது உண்மையில் மன வேதனை காரணமாகவோ தெரியாது அமைச்சர் ரவுப் ஹக்கீம் பல விடயங்களை மனம் திறந்து அதுவும் ஆக்ரோஷமான முறையில் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாகவே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.

இவ்வாறு அமைச்சர் ரவுப் ஹக்கீம் மட்டுமல்ல.. முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகளில் பலரும் சமூகம் சார்ந்த கருத்துகளையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களின் கருத்துகள், இவர்கள் காட்டும் சமூக அக்கறையில் முஸ்லிம் மக்கள் பெருவாரியான நம்பிக்கை கொண்டவர்களாக தற்போது இல்லை என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகள் பனை மரத்தின் கீழிலிருந்து பாலைக் குடித்தாலும் அதனைப் பால் தான் என்று நினைக்காத, நம்பாத ஒரு  நிமையையே முஸ்லிம்களிடம் இன்று காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவித்தவர்களும் சில முஸ்லிம் அரசில்வாதிகளே.

Wednesday, May 21, 2014

அறிக்கைகள் மட்டுமே ஆகப் போனது ஒன்றுமில்லை

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


தம்புள்ளை பள்ளிவாசல், அளுத்கமவில் கடை எரிப்பு, கம்பளையில் எதிர்ப்பு பேரணி இவைகள் மூன்றும் கடந்த முப்பது நாட்களுக்குள் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்ட சம்பவங்கள். பிரித்தானியாவில் எதிர்ப்பு பேரணி நடத்தினாலும்  சரி, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினாலும் சரி முஸ்லிம்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்ற பாணியில் சிஙகள இனவாத அமைப்புகளினதும் சிங்கள இனவாத தனி நபர்களினதும் நடவடிக்கைகள் தொடர்கிறது. மறுபக்கத்தில் முஸ்லிம் தரப்புகளும் இவ்வறான செயல்கள் இடம்பெறும் போது மட்டும் உஷாரடைவதும் அறிக்கையிடவதும் பின்னர் வழமை நிலைக்கு திரும்புவதுமான நிலை. இவற்றினை மட்டுமே அவர்களால் செய்ய முடிகிறது.

முஸ்லிம் தரப்புகள் முடிந்தவற்றைச் செய்கிறார்கள். ஆனால் அவற்றுக்கான முடிவினை அவர்களால் காண முடியாது போகிறது. அரச தரப்பும் வாக்குறுதிகளை வழங்குக்கிறது. உடனடி நடவடிக்கை என்று கூறுகிறது. ஆனால், ஒன்று நடந்தபாடில்லை. இதுதான் உண்மை நிலைமை.

Sunday, May 11, 2014

அவசரமாக தவறினை செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மேல்!



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, கல்முனை கரையோர மாவட்டம், அல்லது அதற்குப் பதிலீடான சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட மேலதிக மாவட்ட செயலகம். ஆகிய நிபந்தனைகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு ஆதரவளித்து கிழக்கு மாகாண சபையில் பங்கெடுத்துக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அன்றுதாம் முன்வைத்த இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இப்போது மீண்டும் ஒரு ஞாபகமூட்டலுக்கு வந்துள்ளது.