Sunday, April 27, 2014

வடக்கில் புலி வேட்டை! தெற்கில் தேரர் வேட்டை!!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஒரே காலப் பகுதியில் இரு விடயங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. வடக்கில் புலி வேட்டை, தெற்கில் தேரர் வேட்டை,  அங்கு புலிகள் மீண்டும் உயிர் பெறுவதாக அரசு கூறிக் கொண்டு சட்ட ரீதியாக தனது தேடுதல்களையும் கைதுகளையும் துரிதப்படுத்திக் கொணடிருக்கும் அதேவேளை, தெற்கில் முஸ்லிம் மக்களில் அடிப்படைவாதிகள் தோற்றம் பெற்றுள்ளதாகவும் சிலர் தேரர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாகச் செயற்படுவதாகவும் கூறிக் கொண்டு பொதுபல சேனா உட்படலான சில அமைப்புகள் சட்டத்துக்கு முரணான வகையில் அமைச்சு ஒன்றுக்குள் அத்து மீறி நுழைந்து தேடுதல் நடத்தும் அளவுக்கு விடயங்கள் இடம்பெறுகின்றன. நாடு ஒன்று.  ஆனால்,  நடவடிக்கைகள் இரண்டான ஒரு கடை கெட்ட நிலைமைக்கு இன்று அனைத்தும் சென்றுள்ளன.

Sunday, April 20, 2014

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம்! உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்!!

                                                                         ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணாஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா..நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு..என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு..என்பது அவன்தான மனிதன்படத்தில் வரும் கண்ணதாசனின் பாடல். இந்தப் பாடலை நினைக்கும்போது பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளுக்கான பின்னணிகளே நினைவுக்கு வருகின்றன.

இந்த அமைப்பின் முஸ்லிம் விரோத போக்குகள் அத்துமீறிப் போனமை தொடர்பில் இன்று அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களே இந்த அமைப்பினை வெறுப்புடன் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளதுடன் இதன் பின்னணிகள் தொடர்பிலும் தங்களது கருத்துகளை பொத்தி, பொத்தி வைக்காமல் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.

Saturday, April 12, 2014

கிணற்றில் தவறி வீழ்ந்ததை எண்ணியே வருந்தாமல் வாய்ப்பைப் பயன்படுத்தி குளித்துக் கொள்வதே சிறப்பு



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களின்போது சற்று அடங்கிப் போயிருந்த முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுப்புகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கி விட்டன. இரு தேர்தல்களின் பின்னர் கொழும்பு, மாளிகாவத்தை மையவாடி காணியுடன் ஆரம்பித்த விவகாரம் இன்று வில்பத்து வரை சென்றுள்ளது.  அண்மையில் நடந்து முடிந்த விடயங்களை நோக்கும் போது இந்த நாட்டின் சட்டம், ஒழுங்கு எவர் கைகளில் உள்ளன என்பதும் இங்கு கேள்விகளாக முன்வைக்க வேண்டிய விடயங்களாகவே உள்ளன. அந்தளவுக்கு அத்துமீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கினறன.

மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால் அங்கு பெரும் அமளி ஏற்பட்ட  நிலையில் அந்தக் கூட்டமும் கைவிடப்பட்டது.

Monday, April 7, 2014

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகள்... வடக்கு, கிழக்கில் போன்று மேற்கிலும் சாயம் வெளுக்குமா?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மேல்மாகாணத்தில் போட்டியிட்ட இரு முஸ்லிம் கட்சிகளும் தாங்கள் தோல்வியடையவில்லை என்று அவர்களே சொல்லக் கூடியபடி வெற்றி பெற்றுள்ளன. அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி வெற்றியைப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் இதற்கு முன்னரும் பல தடவைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு ஓரளவு ஆசனங்களை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடக்கு கிழக்குக்கு வெளியே இடம்பெறும் இவ்வாறான தேர்தல்களில் ஆசன அதிகரிப்பில் தொடர்ந்தும் தொய்வு நிலையே காணப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தல்களின்போது அந்தக் கட்சி இரண்டு ஆசனங்களை எதிர்பார்க்கவில்லை. அதனை விட அதிகமாகவே அந்தக் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.