ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களின்போது
சற்று அடங்கிப் போயிருந்த முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுப்புகள் மீண்டும் முழு வீச்சில்
தொடங்கி விட்டன. இரு தேர்தல்களின் பின்னர் கொழும்பு, மாளிகாவத்தை மையவாடி
காணியுடன் ஆரம்பித்த விவகாரம் இன்று வில்பத்து வரை சென்றுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த விடயங்களை நோக்கும்
போது இந்த நாட்டின் சட்டம், ஒழுங்கு எவர் கைகளில் உள்ளன என்பதும் இங்கு கேள்விகளாக
முன்வைக்க வேண்டிய விடயங்களாகவே உள்ளன. அந்தளவுக்கு அத்துமீறல்கள் இடம்பெற்றுக்
கொண்டிருக்கினறன.
மத நல்லிணக்கம் தொடர்பாக
தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் ஏற்பாடு
செய்திருந்த ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால் அங்கு பெரும்
அமளி ஏற்பட்ட நிலையில் அந்தக் கூட்டமும் கைவிடப்பட்டது.
நல்லிணக்கத்தைக் கூட விரும்பாத ஒரு விரும்பத்தகாத நிலைமை இன்று இந்த நாட்டில் எழுந்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான வாக்களிப்பின் போது பல
அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைகு ஆதரவாகவே செயற்பட்டன. விசேடமாக,
பாகிஸ்தான் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்காக போராட்டமே நடத்தியிருந்தது. அந்த
நன்றிக்காவது இலங்கை முஸ்லிம் விடயங்களில் இனிமேலாவது தலையிடாமல் இருப்போமென
இங்குள்ள எந்தச் சிங்கள இனவாத அமைப்புகளும் சிந்திக்கவில்லை. அவ்வாறான அமைப்புகள்
முன்னரை விட இப்போது முஸ்லிம்கள் விடயத்தில் பாதகமாக தங்களது நிலைப்பாட்டில்
தீவிரம் காட்டி வருகின்றன.
அதே போன்றுதான் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு ஆதரவுக் கரம் கொடுத்த
முஸ்லிம் நாடுகளும் அரபு நாடுகளும் இங்குள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில்
அலட்டிக் கொள்ளவும் இல்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளையோ அவர்களது கருத்துகளையோ அவை
ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. இந்த விடயங்களில் குறித்த நாடுகள் சற்று இறுக்கிப்
பிடித்திருந்தால் ஏதாவது நடந்திருக்கும்.
தமிழர்கள் நம்பும் சர்வதேசத்துக்கும் முஸ்லிம்கள் நம்பும்
சர்வதேசத்துக்குமிடையிலான வித்தியாசம் இதுதான்.
இருப்பினும் ஜெனீவா பிரேணையில் சிறுபான்மை மக்கள் தொடர்பிலான கரிசரணை
வெளியிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களும் உள்ளடக்கப்படுகின்றனர் என்றே நம்பலாம். அதேவேளை,
முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஓர்
அறிக்கையினை நவநீதம் பிள்ளையிடம் கொடுத்து விட்டு சிக்கலுக்குள் சிக்கியதும் நாம்
தெரிந்து கொண்ட விடயமே.
முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கையையும் மையமாகவே வைத்தே நவநீதம்பிள்ளையும் சில
விடயங்களை மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கை முஸ்லிம்
மக்கள் தொடர்பான அக்கறை முஸ்லிம் அங்கத்துவ நாடுகளின் தரப்பிலிருந்து பெரிதாக
பிரதிபலிக்கவில்லை என்பதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
இந்த விடயத்தில் பிழை எங்கு நடந்துள்ளது என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் விடயங்களை அறியாத நிலையில்
எந்த முஸ்லிம், அரபு நாடுகளும் இல்லை. இந்தப் பிரச்சினைகளை மனித உரிமைகள்
பேரவையில் அந்த நாடுகள் எழுப்பியிருக்கலாம். முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில்
கேளவிகளை முன்வைத்திருக்கலாம். ஆனால் ஏன்தான் அவ்வாறு செய்யாமல் மௌனியாக இருந்து
அதிகளவில் இலங்கைக்குச் சார்பாக நடந்து கொண்டனவோ தெரியவில்லை. குறித்த நாடுகள்
முஸ்லிம்களின் நிலைமை தொடர்பில் இலங்கை அரசுக்கு ஆகக் குறைந்தது இலகுவானதொரு
சமிக்ஞையைக் கூட கொடுத்திருக்கலாம் அல்லவா? அதனைக் கூட அந்த நாடுகள் செய்வில்லை.
இலங்கை அரசுடனும் இலங்கை முஸ்லிம்களுடனும் மிகுந்த நட்பு நாடாக உள்ள
பாகிஸ்தான் கூட மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறு நடந்து கொண்டது என்பதனையும்
புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, தமிழர் பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வு காண வேண்டுமென்ற
படிநிலைக்குச் சென்றுள்ள நிலையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் அங்குதான் போக
வேண்டுமென்ற உச்ச நிலை இன்னும் ஏற்படவில்லை
என்றுதான் கருத முடியும்.
உள்ளுர் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அரசியல்வாதிகளும் சரியாக செயற்பட்டால் இந்தப்
பிரச்சினைகளுக்கு உள்ளுரிலேயே தீர்வு கண்டு கொள்ள முடியும். முஸ்லிம் அரசியல்
தலைமைகளின் முரண்பாடுகள், ஐக்கியமின்மையே இந்தச் சமூகத்தின் மீது பிற இனத்தவர்கள்
பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் அடக்கி ஆள்வதற்கும் வாய்ப்பாக அமைந்து
காணப்படுகின்றன.
முஸ்லிம் அரசியல் தலைமைகள், அரசியல்வாதிகளின் இந்தப் பலவீனங்களே இன்று
உள்ளுரில் சிங்கள அரசுகளிடம் முஸ்லிம தலைமைகள் செல்லாக் காசாகப் போயுள்ளமைக்கு
காரணமாகியுள்ளன. முஸ்லிம்களின் அரசியலில் இன்று மகாபாரதத்தில் காணப்படும் வஞசனைகளை
விட விஞ்சிய வஞ்சனைகள் நிறைந்தே காணப்படுகின்றன.
முஸ்லிம்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை என்ன.. சர்வதேச நீதிமன்றத்துக்கு
எவராவது சென்று முறையிட்டாலும் அதனைப் பொய்யென எடுத்துரைக்கும் முஸ்லிம்
அரசியல்வாதிகளும் இங்கு தாராளமாகவே உள்ளனர். கடந்த காலத்தில் நடந்த சில விடயங்கள்
இதற்குச் சான்று.
உதாரணத்துக்கு ஒன்றை நோக்குவோம். இந்த அரசிலிருந்து முஸ்லிம் சமூகத்துக்காக
எதனையும் செய்ய முடியாது என்ற ஒரு முடிவுடன் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அரசிலிருந்து
வெளியேறட்டுமே பார்க்கலாம்... அவரது கட்சிளைச் சேர்ந்த எத்தனை பேர் அவருடன்
சேர்ந்து வெளியேறுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும். அது நடக்கவே முடியாத
காரியம். இன்றைய முஸ்லிம் தலைமைகளின் நாடித் துடிப்புகளையும் அவர்கள் விடும்
ஒவ்வொரு மூச்சுகளையும் சிங்கள அரசுகள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளன. அதன்
அடிப்படையில் செயற்பட்டு காரியங்களை நகர்த்துகின்றன.
முஸ்லிம் தலைமைகள் மற்றும் அரசியல்வாதிகள் விடயத்தில் அவர்களை நாம் பிரிக்கத்
தேவை இல்லை. அவர்களே பிரிந்து கொள்வார்கள் என்ற விடயத்தில் சிங்கள மத்திய அரசுகளும்
இனவாத சிங்கள அமைப்புகளும் மிகுந்த தெளிவைக் கொண்டுள்ளன என்பதனையும் நாம் மறந்து
விடக் கூடாது.
முஸ்லிம்களுக்கு இன்று எழுந்துள்ள பிரச்சினைகள் அரசுடன் பேசித் தீர்க்கக்
கூடியவை. ஆனால், இவ்வாறான பலவீனங்களால்தான் அவர்களது எந்தக் கோரிக்கையும் இன்று
செல்லா காசாகி போயுள்ளன.
மேலும், மர்ஹும் எம்.எச்.எச். அஷ்ரஃப் அன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக
மட்டும் இருந்து கொண்டு எந்தவிதமான அமைச்சுப் பொறுப்பும் வகிக்காத நிலையில் அன்றைய ஜனாதிபதி அமரர்
பிரேமதாசவிடம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ வெட்டுப்புள்ளி தொடர்பில் ஓர்
இரவிலேயே பேசி மறுநாள் காலையிலேயே விமோனசனத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.
அதுதான் அரசியல் தலைமைகளின் ஆளுமை. கம்பீரம். ஆனால், அவை எதனையும் இன்று கள்ளச்
சந்தையில் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதனை சம்பந்தப்பட்ட
தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, புலிவால் பிடித்த நிலையில் அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்
தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி ஐக்கியப்பட்டு காரியமாற்றி சமூக
விடயங்களை வென்று கொள்வதனைத் தவிர இன்று வேறு வழியில்லை.
”கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.அந்த வாய்ப்பைப்
பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.” என்பது ரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ்
டுல்லியஸ் சிசரோ என்ற தத்துவ ஞானியின் கருத்தாகும். அதனை இங்கு குறிப்பிடுவது
பொருத்தமாகவிருக்கும்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 13-04-2014

No comments:
Post a Comment