ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் வேட்புமனுத் தாக்கல் செய்வதிலும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
முஸ்லிம்களின் தனித்துவமிக்க கட்சியாகக் கூறப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் இந்தக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதனை விட வேட்பாளர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருப்பதனையே காண முடிகிறது. காரணம், வட மாகாணத்தில் இதன் செல்வாக்கு என்பது செல்லாக் காசு ஆகியுள்ளது. வட மாகாண முஸ்லிம்களுக்கு விசேடமாக, இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அவர்களைப் பராமுகமாக நடத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுடன் வடக்கு முஸ்லிம்களிடம் அமைச்சர் றிஷாதின் செல்வாக்கு அதிகரித்தும் காணப்படுகிறது. இவற்றின் காரணமாகவே வேட்பாளர்களைத் தேடும் வேட்டைக்கு இந்தக் கட்சி தள்ளப்பட்டிருக்கலாம்.


