ஏ.எச். சித்தீக் காரியப்பர்
கல்முனை மாநகர சபை
விவகாரம் சற்றுக் காலம் ஓய்வெடுத்திருந்த நிலையில் மீண்டும் விழித்துக்
கொண்டுள்ளது. மேயர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் எல்லாம் சரி. எனது பணியும் சரி
என்று அமைச்சர் ஹக்கீம் விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்கு முன்னராக, அவர் நாட்டுக்கு வெளியே உள்ள நிலையில் வரவு – செலவுத் திட்டம் என்ற ஒன்றினால் அங்கும் மீண்டும் சர்ச்சைகள் ஆரம்பித்து
விட்டன. ஹக்கீம் நாட்டில் இல்லாத போதுதான் அதிக விஷயங்கள் நடக்கின்றன என்பதற்கும்
இதுவும் இன்னொரு சான்று.
கடந்த திங்கட்கிழமை
கல்முனை மாநாகர சபையின் வரவு – செலவுத் திட்டம்
சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், குறித்த வரவு – செலவுத் திட்டம்
தோற்கடிக்கப்படும் என்ற ஓர் அச்ச நிலையே. என்றாலும் மேயர் நிஸாம் காரியப்பர்
சட்டத்தைக் காட்டி நிலைமையச் சமாளித்து தப்பித்துக் கொண்ட நிலையில் பிறிதொரு
தினத்துக்கு அதனை ஒத்திவைத்து விட்டார். இருப்பினும் அன்று அங்கு நிலைமை மோசமாகவே
காணப்பட்டுள்ளது. முன்னாள் மேயரும் அவருக்கு ஆதரவானவர்களும் விட்டபாடில்லை. வரவு – செலவுத் திட்ட அறிக்கையின் பிரதிகளைக் கிழத்தெறித்து பேராட்டம் நடத்தும்
அளவுக்கு நிலைமை அங்கு கீழாகப் போயிருந்தது. பொலிஸார் அழைக்கப்பட்டே நிலைமை
கட்டுக்குள் வந்தது.

























