ஜம்மியத்துல் உலமா சபையை அரசியல்மயப்படுத்தும் முயற்சி?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜம்மியத்துல் உலமா சபையை அரசியலுக்குள் சிக்க வைத்து அசிங்கப்படுத்தும் சில விடயங்கள் தற்போது அரங்கேறி வருவதாக தெரிய வருகிறது. முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலரே இதற்கு தூபமிடுவதாகவும் நம்பப்படுகிறது. பொதுபல சேனாவின் ஹலால், ஹராம் விடயம் சூடுபிடித்துக் காணப்பட்டபோது அதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ஜம்மியதுல் உலமா சபையை அரசியல்மயப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அன்றைய முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன.
இந்தநிலையில், இன்னொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த சில அரசியல்வாதிகள் தற்போது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஒரு சாட்டாக வைத்து ஜம்மியத்துல் உலமா சபையையும் இந்த விடயத்துக்குள் இழுத்துப் போட்டு அதனை அரசியல்மயப்படுத்திய பின்னர் தங்களுக்கே உரித்தான பொறுப்புகளையும் அந்த அமைப்பின் தலையில் சுமத்தி விட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ளும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கலப்பில்லாத நிலையில் சமூகம், சமயம் சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது முஸ்லிம்களின் அரசியல் விடயங்களிலும் தலையிட வேண்டுமென்றால் முஸ்லிம்களுக்கென்று கட்சிகளும் தேவையில்லை. முஸ்லிம்களுக்காகத்தான் நாடாளுமன்றம் செல்லுகிறோம் என்று வாக்குகளைப் பெற்று அங்கு செல்ல வேண்டிய தேவையும் எவருக்கும் இல்லை.
அரசாங்கத்துடன் இணைந்திருப்பதே உங்களுக்காகத்தான் என்று முஸ்லிம்களிடம் கூறிக் கொண்டிருப்போரின் கையாலாகத்தனத்துக்காக இன்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை அரசியல்மயப்படுத்த முயற்சிப்பது வேதனையான ஒரு விடயம்.
பொதுபல சேனாவின் ஹலால், ஹராம் பிரச்சினை ஆரம்பித்த போது அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது, பேசித் தீர்க்கும் ஓர் ஆரம்ப நிலையில் காணப்பட்டபோதும் அதற்கு வழி விடாது இந்த விவகாரத்தை ஊதிக்கெடுத்து நாற்றமடிக்க வைத்து மூக்குடைபட வைத்தவர்களும் இவ்வாறான அரசியல்வாதிகளே. வைக்கோல் பட்டறையில் படுத்துறங்கும் நாய் போன்று தானும் தின்பதில்லை. தின்பவனை விடுவதும் இல்லை என்ற நிலையிலேயே இன்றைய பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர்.
முஸ்லிம்களுக்களுக்கும் இந்த நாட்டில் பிரச்சினைகள் உள்ளன என்பது இன்று, நேற்றான விடயமல்ல. தமிழர்களுக்குப் போன்று தொடர்ந்து பிரச்சினைகள் இருக்காவிட்டாலும் காலத்துக்குக் காலம் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டபோது அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூதோ அல்லது சேர் ராஸிக் பரீதோ, பாக்கீர்மாகாரே ஏன் அஷ்ரஃப்போ இந்தப் பிரச்சினைகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையோ அல்லது ஏதாவது முஸ்லிம் ஸ்தாபனமோ முன்வந்து தீர்த்து வைக்க வேண்டுமென்று கோரவில்லை. நடுங்கா தொடைகள், உடையாத முள்ளந்தண்டுகளுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர்களே எதிர்கொண்டு தீர்வு கண்டனர் என்ற உண்மையை யாரும் மறந்து விடக்கூடாது.
ஆனால், இன்று அரசின் பங்காளிகளாகவும் அதேவேளை, பதவிகளிலும் தங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் அணில் விட்டு மாங்காய் பறிக்க முயற்சிப்பதானது அவர்களின் அரசியல் நிர்வாணத்தையும் வங்குரோந்துத் தனத்தையுமே காட்டுகிறது.
இது ஒரு புறமிருக்க, நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ஹக்கீம் சில கருத்துகளை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இல்லாது ஒழிக்கும்
நடவடிக்கைகளுக்காக ஜம்மியத்துல் உலமா சபை குரல் கொடுக்க வேண்டும். ஹலால், ஹராம் விவகாரம் மாத்திரம்தான் தங்களுக்குரிய விடயம் என்றிராது அரசியல் ரீதியாகச் சமூகத்தைப் பாதிக்கும் விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்புச் செயலாளர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக அக்கறையில்லாது இருந்து விடக்கூடாது என ஹக்கீம் கடும்வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார்.
அவரின் இந்தக் கூற்றானது முஸ்லிம்களின் பிரதான மத நிறுவனமான ஜம்மியத்துல் உலமா சபையைக் கேலிக் கூத்தாக்கி உள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது. ஜம்மியத்துல் உலமா சபையும் அரசின் கையாளா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல.. அண்மையில் பொதுபல சேனாவுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் முடிச்சுப் போட்ட அதே ஹக்கீம், இன்று ஜம்மியத்துல் உலமா சபைக்கும் பாதுகாப்புச் செயலாளருக்குமிடையில் சூசகமாக முடிச்சுப் போடுகிறார். மேலும் முஸ்லிம்கள் மத்தியில் ஜம்மியத்துல் உலமா சபையை ஒரு சந்தேகக் கண்ணோடு நோக்கும் நிலையை ஒரு பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் கட்சியின் தலைவர் உருவாக்கியிருப்பது ஜீரணிக்க முடியாத விடயம்.
தமிழர்களுக்காகப் பிஷப் அமைப்பு அறிக்கை விடுகின்றது என்றால் ஜம்மியத்துல் உலமா சபை ஏன் மௌனமாக இருக்க வேண்டும் என்பதும் அமைச்சர் ஹக்கீமின் வாதமாக உள்ளது. ஆனால், அறிக்கை விடுமாறு பிஷப் அமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்ளவில்லை என்பதனை ஹக்கீம் புரிந்து கொளள் வேண்டும். அதுமட்டுமல்ல.. இலங்கை அமைச்சரவையில் தமிழர் சார்பில் அவர்களது பிரச்சிகைளைப் பேசித் தீர்க்கக் கூடிய திராணியுள்ளவர்கள் இல்லை என்ற அடிப்படையிலும் பிஷப் அமைப்பு இந்த விடயத்தைக் கையாண்டிருக்கலாம். ஆனால், முஸ்லிம் அமைச்சர்கள் எத்தனை பேர் அமைச்சரவையில் உள்ளனர். முண்டுக் கொடுக்கின்றனர் என்பதனைத் கூறித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை.
சிறுபான்மையினருக்கு எதிரான விடயங்களில் அனைவரும் ஒன்றிணைத்து குரல் கொடுக்க வேண்டும்தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதற்காக ஜம்மியத்துல் உலமா சபையையும் இதற்குள் இழுத்துப் போடத் தேவையில்லை.
மேலும், தங்களால் எதனையும் செய்ய முடியாது என்ற விரக்தி நிலையிலும் அதே நேரம் தங்களது பதவி, பந்தாக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் ஒரு மத அமைப்பின் தலையிலும் இந்த விடயத்தை சுமக்க வைத்து அதனையும் அரசியல் மயமாக்க முயற்சிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது.
1. கிழகு மாகாண சபைத் தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டுமென முஸ்லிம் அமைப்புகளும் சில முஸ்லிம் சமயம்சார் நிறுவனங்களும் உள்ளுர விருப்பம் கொண்டிருந்த போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது அதனைக் கண்டும் காணாத நிலையில் அவற்றின் விருப்பத்தை நிராகரிக்கும் வகையில் நடந்து கொண்டது ஏன்?
2. இன்று கண்டங்கள் போன்று பிளவுபட்டுக் காணப்படும் இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை முன்வரவேண்டுமென ஹக்கீம் கோரிக்கை முன்வைக்காதது ஏன்?
3. வடக்கிலும் கிழக்கிலும் குடியேற்றங்களுக்கு இராணுவம் தடையாக நிற்பதாகக் கூறும் ஹக்கீம் அதற்கு எதிராக குரல் கொடுக்க ஜம்மியத்துல் உலமாவை அழைக்காதது ஏன்?
ஆனால், 13 ஆவது திருதச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடாது என யார் குரல்கொடுத்துக் கத்தினாலும் அரசாங்கம் அதனைத் திருத்திய தீருமென்பது அனைவராலும் தெரிந்த ஒரு விடயமாக இது இருக்கும் நிலையில், தோற்கப் போகும் இந்த விடயத்துக்காக ஜம்மியதுல் உலமாவை கூட்டுச் சேர்ப்பது ஏன்?
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 16-06-2013


No comments:
Post a Comment