ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை நிறுவி விட்டது. இன்று அதன் முன்பாக பாரிய பொறுப்புகள் உள்ளன. ஏனைய மாகாண சபைகள் போன்றல்லாது வடமாகாண சபைக்கு அதிக பணிகள் உள்ளன. முதன் முலாக வடக்கில் நிறுவப்பட்ட மாகாண ஆட்சி என்பதனால் அனைத்துப் பணிகளையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகச் செய்ய வேண்டிய கட்டாய நிலை அந்த மாகாண சபைக்கு உள்ளது.
இதற்கு மேலாக தென்னிலங்கை சிங்கள சக்திகளின் விமர்சனங்களையும் எதிர் அம்புகளையும் தாங்கிக் கொண்டே மறுபுறத்தில் மத்திய அரசின் கடுமையான பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய நிலை. இவை அனைத்துக்கும் மேலாக வடபுல மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களது அபிலாஷைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டிய கட்டாய நிலை. தமிழ் மக்கள் தங்களை எதற்காக ஆட்சி பீடமேற்றினார்களோ அதனைப் புரிந்து கொண்டு பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை, சர்வதேசத்தின் கழுகுப் பார்வையின் முன் களங்கம் ஏற்படாமல் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிதானம்.. இவைகள்தான் இன்று வட மாகாண சபையின் ஆட்சி நிர்வாக இயந்திரத்தின் சுழற்சி சக்கரங்களாக உள்ளன.



